உலக தாய் மொழி தினம்:
உலக தாய் மொழி தினம் (International Mother Language day) (UNESCO) பிப்ரவரி 21 ல் அனுசரிக்கப்படுகிறது.
உங்கள் மொழிகளும், நிறங்களும் மாறுப்பட்டடிருப்பது இறைவனின் அத்தாட்சிகளில்
ஓன்றாகும். ஆழ்ந்து சிந்திக்கும் அகிலத்தார்களுக்கு அநேகப் படிப்பினைகள் இதிலுண்டு...
என்பதாக அருள்மறைக் குர்ஆன் கூறுகிறது. (குர்ஆன் 30-22).
தமிழ், அரபு, ஆங்கிலம், ஹிந்தி, பெங்காலி, பிரெஞ்சு, பார்ஸி, ஒரியா, டச்சு, மலையாளம் மற்றும் பஞ்சாபி என மொழிகளின் பெயர்களை மட்டுமே
பல பக்கங்கள் சொல்லலாம்.
உலகில் மொத்தம் 6800 க்கும் மேற்பட்ட பாஷைகள் இருப்பதாக இணையதளத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டுக்கு நாடு, சமூகத்துக்கு சமூகம் வித்தியாசப்படுகிற நிறங்களும், மொழிகளும் நமக்கு இறைவனின் சர்வ வல்லமையை உணரச் செய்வதோடு, அவனுக்கு முன்பாக நம்மை சரணடையச் செய்து விடுகிறது.
மொழிகள் இறைவனால் கற்பிக்கட்டவையே:
காரணம்...? இறைவனே உலகின் சகல மொழிகளுக்குரிய ஒரே ஆசான். மொழிகளின் அச்சரங்கள், அதன் ஒலி வடிவங்கள், உச்சரிப்புத் தொனிகள், இலக்கண இலக்கிய நயங்கள் அனைத்தும் இறைவனால் போதிக்கப்பட்ட
ஒன்றே.
இறைவன் மனித சமூகத்தை நெறிப்படுத்துவதற்காக
ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒரு குறிப்பிட்ட நபியை ‘ஆதம் (அலை) அவர்கள் தொடங்கி பெருமானார் (ஸல்) அவர்கள்
வரை” பன்னூற்றுக்கணக்கான நபிமார்களை அனுப்பித் தந்தான் என்பது
நாம் அறிந்த வரலாறே.
அப்படி அனுப்பப்பட்ட நபிமார்கள்
அனைவரும் தங்கள் சமூகத்தின் தாய்மொழியை அறிந்தவர்களாகவே இருந்தார்கள். அவர்களுக்கு
அருளப்பட்ட வேதமும் அம்மொழியிலேயே இருந்தது.
‘அவரவர்களுக்கு
விளங்க வேண்டும் என்பதற்காக அவரவர் பேசும் பாஷையை அறிந்த இறைத்தூதர்களையே நாம் அனுப்பினோம்” என இறைவன் சொல்கிறான். (குர்ஆன் 14:4).
எல்லா நபிமார்களும் தங்கள் சமூகத்தின்
தாய் மொழியை தெரிந்தவர்களாகவே இறைவனால் அனுப்பப்பட்டார்கள் என்றார்கள் பெருமானார்.
தாவூத் நபிக்கு வழங்கப்பட்ட
ஜபூர் வேதம் ‘யுனானி” பாஷையிலும், மூஸா நபிக்கு வழங்கப்பட்ட ‘தவ்ராத்” வேதம் அப்ரானி பாஷையிலும், ஈஸா நபிக்கு வழங்கப்பட்ட இன்ஜில் வேதம் ‘சுர்யானி ” பாஷையிலும் இருந்தது. இதன் வழியாக நாம் தாய்மொழியின் மகத்துவத்தை மிகச் சிறப்பாக
உணர்ந்துக் கொள்ள முடிகிறது.
தாய்மொழியை புறகணிப்பதும், அந்நிய மொழியை கற்பதும்:
தன் தாய்மொழியை புறந்தள்ளிவிட்டு
அயல் மொழியின் மீதான மோகத்தால் அதை பேசுவதிலும், கற்பதிலும் ஒரு சமூகம் ஆர்வம் காட்டுமெனில் அது அம்மொழிக்குரிய அழிவு மட்டுமல்ல.
மாறாக அச்சமூகத்தின் நாகரிகம், பண்பாடு, பாரம்பரியம் மற்றும் கலச்சார மரபுகளுக்கான அழிவும் கூட
அங்கு அடித்தளமிடப்படுகிறது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
அதே சமயத்தில் தேவையறிந்து அந்நிய
மொழியைக் கற்றுக்கொள்வது கட்டாயமான ஒன்றே என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
யூதர்கள் கடிதம் எழுதினால் அதை
படித்து அதற்கு பதில் கடிதம் எழுதுவதற்காக பெருமானார் அவர்கள் ஜைது இப்னு ஸாபித் என்ற
நபித்தோழரை யூத மொழியான சுர்யானி பாஷையைக் கற்றுக் கொள்ளும்படி ஏவுகிறார்கள். அதன்படி
15 நாட்களுக்குள் ஜைது இப்னு ஸாபித் (ரலி)
அவர்கள் அம்மொழியை திறம்படக் கற்றுக் கொள்கிறார்கள்.
அந்நிய மொழியை கற்றுக் கொள்வதில்
தடை ஏதும் இல்லை. அது போன்று நம் தாய்மொழி வழக்ககொழிந்துப் போகாமலும் பார்த்துக் கொள்வதும்
தலையாயக் கடமையாகும்.
அரபு மொழியும் - அன்னை தமிழும்
தாய்-சேய் உறவுடையது:
இறுதித்தூதராக அரபுலகில் வந்துதித்த
நம் கண்மனி நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளப்பெற்ற அருள்மறைக் குர்ஆனின் அரபு மொழியும், அதன் செறிவு நிறைந்த இலக்கண இலக்கிய நயங்களும் பாண்டித்தியம்
பெற்ற அன்றைய அரபு பண்டிதர்களையும், ஜாம்பவான்களையும் அதிகமாக தடுமாறவே செய்தது.
அரபு பாஷை என்பது குர்ஆனின்
மொழி, இஸ்லாமிய பிராந்தியத்தியங்களின் தாய்மொழி, ஒவ்வொரு இஸ்லாமியனும் அறிந்து வைத்திருக்க வேண்டிய இறைமொழி, சுவர்;க்கலோகத்தின் மொழி என்பது அதன்
கூடுதல் சிறப்பாகும்.
‘யாமறிந்த
மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் உண்டோ” ‘கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி
” என்கிற தொன்மையான மரபுகளைச் சார்ந்த செம்மொழியான தமிழ்
மொழிக்கும், இறை மொழியான அரபு மொழிக்கும் இடையிலான பந்தம் பிரித்தற்கரியது.
அரபு - தமிழ் மொழிகள் குறித்து
ஆராய்கிற போது கிடைக்கிற அரிய பல வியப்பூட்டும் தகவல்கள் நம்மை தலைநிமிரச் செய்கிறது.
உலகின் இரு வௌ;வேறு பகுதிகளில் வாழும் மக்களால் பேசப்பட்டாலும்,
‘செமிடிக் மொழி“ வகையை சார்ந்த அரபுக்கும் ‘திராவிட
மொழி“ வகையை சார்ந்த தமிழுக்கும் மத்தியிலான உறவு ‘தாயுக்கும் - பிள்ளைக்குமாக”
நெருக்கமானது என்பதற்கு இஸ்லாமிய
தமிழ் இலக்கியப் படைப்புகள் ஓர் அற்புதமான சான்றாகும்.
யவனர் தந்த வினைமா ணன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்.
சங்க இலக்கியத்தில் அரபுகள்
‘யவனர்கள்” என அழைக்கப்பட்டனர். அரபு நாட்டிற்கும் தமிழகத்திற்குமுள்ள தொடர்பின் தொன்மையை
இந்த அகநானூறுப் பாடல் வரிகளில் நாம் காணவே முடிகிறது.
அத்தோடு மட்டுமல்ல இஸ்லாமியப்
புலவர்கள் அரபு மொழி இலக்கியங்களைப் பின்பற்றிப் புதுவகையானப் பிரபந்தங்களைத் தமிழ்
கூறும் நல்லுலகிற்கு படைத்தளித்தனர். இதன் மூலம் நம் தமிழ் இலக்கிய வரலாறு கூடுதல்
வலுப்பெற்றது என்பது மறுதலிக்க முடியாத உண்மையாகும்.
இஸ்லாமிய தமிழ் இலக்கியங்கள்:
கிஸ்ஸா (கதையுரைத்தல்), முனாஜாத்து (பிரார்த்தனை செய்தல்), மஸ்அலா (கேள்வியும் பதிலும்), படைப்போர் (இஸ்லாமிய யுத்தங்கள்) ஆகியவை நான்கும் அரபு மொழி இலக்கியங்களை பின்பற்றி
இஸ்லாமிய தமிழ் இலக்கியவாதிகளால் அறிமுகப்படுத்தப்பட்ட தமிழ் இலக்கியப் பிரவுகளாகும்.
இது தவிர புராணம், நாயகம், கலம்பகம், அந்தாதி, திருப்புகழ், பிள்ளைத் தமிழ், மாலை, படைப்போர், நாமா, மசாலா, அம்மாளை, ஏசல், சிந்து, தாலாட்டு, கும்மி, கோவை, திருப்பாடல் திரட்டு, பலபாடல் திரட்டு, நாடகம், ஞானப் பாடல்கள் போன்றன இஸ்லாமிய தமிழ் இலக்கியவாதிகளால்
உருவாக்கப்பட்ட படைப்புகள் என பன்னுலாசிரியர் மர்ஹ_ம் எம்.ஆர்.எம்.அப்துர் ரஹீம் அவர்கள் முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் என்ற தன் நூலில்
பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
‘தமிழுக்கும்
அரபு மொழிக்குமான பிரிக்க முடியாத உறவைப் போல” தாய் மொழியாம் தமிழ் மொழியின் மீதும் தமிழ் பேசும் இஸ்லாமியன் கொண்டிருக்கிற நேசத்தையும்
அளவிட்டு சொல்லிவிட முடியாது.
அரபுகள் வணிகம் நிமித்தமாக உலகின்
பல்வேறு நாடுகளுக்கும் புலம்பெயர்ந்து சென்று தங்கிய பகுதிகளில் அந்த மக்களுக்கு இஸ்லாத்தை
எத்தி வைக்க அந்தந்த நாட்டு மொழியின் ஒலிவடிவத்தை அரபு மொழியின் வரிவடிவிலேயே எழுதிப்
படித்துள்ளனர்.
அதன்படி அரபுகள் இந்திய வந்த
போது இந்திய மொழிகளை அரபியில் எழுதிப்படித்து விட்டு நமக்கும் அந்த முறையை கற்றுத் தந்தும் சென்றுள்ளார்கள்.
அரபு தமிழின் அவசியம்:
இதன் விளைவே, முஸ்லிம் அரசர்களாலும், அவர்களுக்கு பின் வந்த ஆங்கிலேயர்களாலும் கூட வரிவசூல், அளவை, நிதிநிறுவனங்கள், அரசு நிர்வாகம், சட்டம் ஒழங்கு, வேளான்ணமை, வியாபாரம், சிவில் நிர்வாகம், வெளியுறவு மற்றும் ஆட்சி மொழிகளில் இந்தியா முழுவதிலும் குறிப்பாக தமிழ் மொழியிலும்
பல அரபி மொழிச் சொற்கள் பயன்படுத்தப்பட்டு, அவை தமிழ் மொழியோடு கலந்து போயின என்பது வரலாற்று உண்மையாகும்.
அமல், இனாம், கஜானா, தாவா, கைது, கைதி, நகல், முன்சீப், மாமூல், வக்கீல், பைசல், போன்ற வார்த்தைகள் தமிழ் மொழியின் ஒரு பகுதியாக இடம்பெற்றுள்ள
அரபு மொழியாகும்.
இப்படியான வார்த்தை பிரயோகத்தை
தாண்டி அரபுதமிழில் பல புத்தகங்களும் இருக்கின்றன. அரபுதமிழ் தமிழகத்தில் குர்ஆன் மத்ரஸா
மக்தபுகளில் குர்ஆன் ஓதிமுடித்த பின்பு ஸிம்தும்ஸ்ஸிப்யான், அஹ்காமுல் முஸ்லிமின் போன்ற கிதாபுகள் தொன்று தொட்டு போதிக்கப்பட்டு
வருகிறது என்பது இதற்கு நல்லதோர் சான்றாகும். தமிழகத்தில் அரபுத்தமிழ் நூல்கள் 150 வரை இருந்ததாக எம்.ஆர்.எம்.
அவர்களின் இஸ்லாமியக் கலைக் களஞ்சியம் சொல்கிறது.
இப்படியாக அரபுக்கும் தமிழ் மொழிக்குமான சரித்திரம் நாமெல்லாம் பெருமைப்படக் கூடிய
ஒன்றாகும்.
மொழிப் பாகுபாடு கண்டிக்கப்பட
வேண்டியவையே:
ஒரு மொழியின் பெருமையும், அதன் சிறப்பும் மொழி பேதத்தை ஏற்படுத்தி அடுத்தவனை காயப்படுத்திவிடக்
கூடாது என்பதை இஸ்லாம் மிக வலியுறுத்திச் சொல்கிறது.
அரபு மொழி தெரிந்தவருக்கும் தெரியாதவருக்கும் மத்தியில் எந்த வித ஏற்றத்தாழ்வுகளும்
இல்லை. ஒவ்வொருவரும் அவரவரின் இறையச்சத்தைக் கொண்டே வித்தியாசப்படுகிறீர் என பெருமானார்
அவர்கள் தன் தோழர்களுக்கு உபதேசித்த வார்த்தைகளை இன்றைய மொழியால் பாகுபாடுகளையும், யுத்தங்களையும் உருவாக்கிடத் தூண்டும் உள்ளங்களுக்கு எடுத்துரைப்போம்.
‘இஸ்லாம்
எங்கள் வழி, இன்பத் தமிழ் எங்கள் மொழி” இதுவே எங்கள் நபி வழி என்றுரைப்போம்.
நன்றி: மொளவி லுத்புல்லாஹ்
அல் பிலாலி B.Com, M.A
No comments:
Post a Comment